ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது முற்று முழுதாக மக்களை கடனில் நெருக்கும் வரவு செலவு திட்டமாகவே நாம் கருதுகின்றோம். தோல்வி கண்டுள்ள வரவு செலவு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை கூறுகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் புதுமையான, புதிய சிந்தனைகளை கொண்ட வரவு செலவு திட்டமொன்று முன்வைக்கப்படும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறான எந்தவொரு அவசியமான காரணிகளும் இந்த வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.
இவ்வாறான மோசமானதொரு வரவு செலவு திட்டத்தை அரசாங்கம் முன்வைத்ததை எண்ணி நாம் கவலைப்படுகின்றோம். நாட்டின் நம்பிக்கை இதன் மூலமாக வீழ்ச்சி கண்டுள்ளது என்றே கூறியாக வேண்டும், எனவே இந்த வரவு செலவு திட்டம் தோல்வி கண்டுள்ளது என்றே நாம் கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்.