எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது – அநுரகுமார திஸாநாயக்க

அரசு முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தால் எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட நிலையில் அது குறித்து ஜே.வி.பியின் நிலைப்பாட்டைக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசு முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது சகல வகையிலும் கவலையளிக்கக்கூடிய வரவு – செலவுத் திட்டமாக மாறியுள்ளது. இலங்கையைப் பாரிய கடன் பொறிக்குள் தள்ளும் வரவு செலவுத் திட்டத்தையே அரசு தயாரித்துள்ளது.

நாடு முகங்கொடுக்க நேர்ந்துள்ள பொருளாதார நெருக்கடிகளிருந்தும், கொரோனா வைரஸ் நிலைமைகளில் நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிருந்தும் மீளெழும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமையவில்லை. வழமை போன்றே கடன்களைப் பெற்றுக்கொண்டு செலவு செய்யும்  வரவு செலவுத்திட்டமாகவே இது அமைந்துள்ளது.

மூன்று பில்லியன் சர்வதேச கடன் எடுத்தே இந்த வரவு – செலவு திட்டத்தை நிரப்பியுள்ளனர். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் எமது கடன்களில் ஐந்தாயிரம் பில்லியன் சேர்ந்துள்ளது. ஏற்கனவே இருந்த 13 ட்ரில்லியன் கடன் தொகையுடன் மேலும் ஐந்து ட்ரில்லியன் சேர்கின்றது. எனவே, எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.