எமது இராணுவத்தைத் தண்டிப்பதற்காக துரோக சக்திகளால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மனித உரிமைத் தீர்மானத்திலிருந்து நாங்கள் விலகி எவருக்கும் அடிபணியாத நாட்டினை நாம் கட்டி எழுப்பியுள்ளோம் என பிரதமர் மகிந்தராஜபக்க்ஷதெரிவித்துள்ளார்
களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று எமக்கு முக்கியமானதோர் நாளாகும். இன்றுடன் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்று ஒரு வருடம் பூரணமாகிறது. அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு என்பது நாட்டின் முக்கியமான காலமாகும் என கூற விரும்புகிறேன்.
எத்தகைய சிரமங்கள் காணப்படினும் யாருக்கும் அடிபணியாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப தைரியமாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
எந்த நிலையிலும் நாட்டைக் காட்டிக் கொடுக்கவோ, தலை குனியவோ செய்யாத மக்களாக நாங்கள் முன்னேறி வருகிறோம். எனவே, நாங்கள் மிகவும் சரியான முடிவுகளை எடுத்து இந்த ஆண்டுக்குள் முன்னேறுவோம்.
இன்று அனைவருக்கும் தண்ணீர் வழங்கும் திட்டத்தை நாங்கள் தொடங்குகின்றோம். அடுத்து முழு நாட்டு மக்களுக்கும் சுத்தமான குடிநீரை வழங்க விரும்புகிறோம்.
தற்போது நம் நாட்டில் சுமார் நாற்பது சதவீத மக்களுக்கு மட்டுமே குடிநீர் கிடைக்கிறது.
ஆனால் 2021 இற்குள் முழு நாட்டு மக்களுக்கும் குடிநீரை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். நேற்றைய வரவு செலவுத் திட்டத்தில் அதற்கென ரூபாய் 1,000 பில்லியனை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இலங்கை முழுவதும் 40,000 கி.மீ நீர் குழாய்களை நிறுவுவதற்கு உள்ளூர் பொறியாளர்களை நாங்கள் நியமிக்கிறோம். அந்தத் திட்டம் முந்தைய அரசாங்கம் செய்திருக்க வேண்டிய ஒன்று.
ஆனால் நாங்கள் அவர்களைக் குறை கூறவில்லை. அந்த பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுவோம். 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அனைவருக்கும் தண்ணீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.