கல்குடா பிரதேச மக்கள் பொழுதுபோக்கு தளங்களுக்கு செல்ல தடை!

01 13
01 13

கல்குடா பிரதேச மக்கள் பிரதேசத்தினை அண்டியுள்ள பொழுதுபோக்கு தளங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மறு அறிவித்தல் வழங்கும் வரையில் எவரும் செல்ல வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தாக்கம் அதிகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் அவசர ஒன்று கூடல் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது பொழுதுபோக்கு தளங்களான பொத்தானை ஆறு, சந்தியாறு, நாசிவன்தீவு கடற்கரை, பொண்டுகள்சேனை வாய்க்கால், பாசிக்குடா கடற்கரை பிரதேசங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும், இது தொடர்பில் காவல்த்துறையினர்தொடர்ந்தும் கண்கானிப்பில் இருப்பார்கள் என்றும், விவசாய செய்கைக்கு செல்வதற்கு விவசாயிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விசாயிகள் போன்று போலியான முறையில் எவரும் செல்ல வேண்டாம் என்றும் பணிப்புரை வழங்கப்பட்டது.

அத்தோடு மருந்தகங்கள் தவிர்ந்த வியாபார நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன் வியாபாரம், மரக்கறி வியாபாரம் என்பவற்றை மேற்கொள்வதற்கு தனித் தனியாக இடம் வாழைச்சேனை பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்படும் என்று பணிக்கப்பட்டது.

வாழைச்சேனை மீன் பிடி துறைமுகம் மூடப்பட்டு காணப்பட்டுள்ள நிலையில் மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்களின் பிரச்சனைகளை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பதினைந்து நபர்கள் கொண்ட குழு விரைவாக் கூட்டப்பட்டு அதில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு மீன் தொழிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதுடன், சிகை அலங்கார நிலையங்கள் மீள திறப்பது தொடர்பில் ஒரு வாரத்திற்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாழைச்சேனை காவல்துறை பிரிவில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உருவாகாத வகையில் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் . எம்.பி.முகைதீன், வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, இராணுவ உயர் அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வர்த்தக சங்கத்தினர், செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.