அடக்குமுறை கூட எமது மக்களின் உணர்வுகளும் பலமடங்காகக் கூடிச்செல்லும்-தர்மலிங்கம் சுரேஸ்

DSCN0106 1
DSCN0106 1

எம் இனத்தின் மீது அடக்குமுறை கூடக்கூட எமது மக்களின் உணர்வுகளும் பலமடங்காகக் கூடிச்செல்லும். அதன்படி எம் மாவீரர் செல்வங்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும், எமது நினைவுகூறல் நிகழ்வுகளையும் யாரும் தடுக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மாவீரர் நிகழ்வு தொடர்பிலான நீதிமன்றத் தடையுத்தரவு மற்றும் வாகரை காவற்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் (22) கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலே மாவீரர் துயிலுமில்லங்கள் காவற்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. நாங்கள் வருடாவருடம் எமது மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வினை செய்வதற்காக மாவீரர் துயிலுமில்லங்கைளை அப்பிரதேச மக்களுடன் இணைந்து துப்பரவு செய்து வருகின்றோம். கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரைக்குமான காலப்பகுதியில் வேறு நிகழ்வுகளைத் தவிர்த்து எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடி, அவர்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூறுவதற்காக எமது மக்கள் ஆயத்தமாகிக் கொண்டிருப்பார்கள்.

அந்த அடிப்படையிலே இவ்வருடமும் வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் மக்கள் தங்களின் உறவுகளை, மாவீரர்களை நினைவுகூறுவதற்கான பணிகளை ஆரம்பிக்கின்ற வேளை காவற்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து நீதிமன்றத் தடயுத்தரவினால் தடுத்தும் வருகின்றார்கள்.

அந்தவகையில் நேற்றைய தினம் வாகரை மாவீரர் துயிலுமில்லத்தின் நிலைப்பாடு தொடர்பில் அறிவதற்காக நான் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். அவ்வேளையில் அத்துயிலுமில்லத்தைச் சூழ காவற்துறை மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு யாருமே செல்லமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. இருப்பினும் நான் அங்கு சென்று வருகின்ற வழியில் என்னை மாங்கேணியில் வைத்து வாகரைப் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றார்கள். இனிமேல் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது, மக்களைத் தூண்டக் கூடாது என்றவாறு கடுமையான தொனியில் விரட்டினார்கள். அதற்கான பதிலை அசவர்களுக்குத் தெரிவித்தேன். பின்னர் சுமார் எட்டு மணியளவில் என்னை விடுவித்தார்கள்.

கெடுபிடிகள் மூலம் என்னை அடக்கலாம் ஆனால், எம் மக்களின், எம் இனத்தின் உணர்வை அடக்க முடியாது. எங்களது உணர்வுகளைத் தடுக்கத் தடுக்க மீண்டும் மீண்டும் உங்கள் மீது, உங்கள் இராணுவத்தின் மீது, அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீது சர்வதேச அழுத்தங்கள் கூடுமே தவிர என்றும் குறையாது. எங்களை அடக்கி ஒடுக்க முற்படுவது முட்டாள்தனமான வேலை. எங்களைப் பொருத்தவரையில் எத்தடைகள் வந்தாலும் வருடம் தோறும் எங்களுக்காக உயிர் நீத்தவர்களை நாங்கள் பூசிப்போம், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம், அவர்களை நினைவுகூறுவோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த இலங்கையினுடைய நீதித்துறை பக்கச் சார்பாக ஒரு சாராருக்குச் சாதகமாக அதாவது பெரும்பான்மையினத்தை மையப்படுத்தியதாக இருந்தாலும் நாங்கள் எங்களது உரிமைகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. என்றோ ஒரு நாள் எம் இனத்திற்கான விடுதலை நிச்சயம் கிடைக்கும். எம் இனத்தின் மீது அடக்குமுறை கூடக்கூட எமது மக்களின் உணர்வுகளும் பலமடங்காகக் கூடிச்செல்லும். அதன்படி எம் மாவீரர் செல்வங்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும், எமது நினைவுகூறல் நிகழ்வுகளையும் யாரும் தடுக்க முடியாது.

இவ்வாண்டு ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கிலே நினைவுகூறலைத் தடுக்கும் முகமாக வடக்கு கிழக்கில் இருக்கும் நீதிமன்றங்கள் தடையுத்தரவினைப் பிறப்பித்திருக்கின்றன. அதே போல் எனக்கான தடையுத்தரவும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் அன்னை பூபதி, தியாகதீபம் திலீபன் ஆகியோரின் நினைவின்போதும் எனக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதே போன்று வடக்கு கிழக்கில் பலருக்கும் இவ்வாறு தடையுத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நடவடிக்கைகளெல்லாம் மிகவும் வேடிக்கையான விடயம். விடுதலைப் புலிகள் இந்த மண்ணிலே இல்லை. நாங்கள் 2009ம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம் என்றெல்லாம் சொல்லுகின்ற இந்த அரசாங்கம் ஏன் மேலும் மேலும் எமது நிகழ்வுகளைத் தடுக்கின்றது. ஒருவேளை ஏதேனுமொரு அச்சம் அரசாங்கத்திற்கு இருக்கின்றதோ என்றே எண்ணத் தோணுகின்றது. ஆனாலும் நாங்கள் ஏதோவொரு வகையிலே இந்த நிகழ்வினை நடத்தியே தீருவோம். எந்த விதத்திலும் எமது உறவுகளுக்கான நினைவேந்தலை நாங்கள் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்று தெரிவித்தார்.