ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை – வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்!

school 3
school 3

வடக்கு மாகாணத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ள வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி இ.இளங்கோவன், பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு நாளை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் (மேல் நிலை பாடசாலைகளுடன் இயங்கும் ஆரம்ப பிரிவுகள் உள்பட) பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லை.

எனினும் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பாக கணிக்கப்படும். மேலும் அவர்கள் பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படவேண்டும்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வடக்கு மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உரிய அறிவித்தலை வழங்கினால் அவர்களுக்கும் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.