குருநாகல் பிரதேச தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மற்றும் குருநாகல் பிரதான தபால் அலுவலகத்தின் அலுவலக ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குருநாகல் மாவட்டத்தின் தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சில அதிகாரிகள் தபால் விநியோகம் மற்றும் மருந்து விநியோகத்திற்காக மற்றைய தபால் மற்றும் உபதபால் நிலையங்களுக்கு சென்றுள்ளதால் சுகாதார ஆலோசனைக்கு அமைய மாவட்டத்தின் அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. அதன்படி, குருநாகல் மாவட்டத்தின் அனைத்து தபால் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தபால் திணைக்களத்தினால் செயல்படுத்தப்படுகின்ற குருநாகல் மாவட்டத்தில் மருந்து விநியோக நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கான மாற்று நடவடிக்கை ஒன்றை வடமேல் மாகாண பிரதான செயலாளர், குருநாகல் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி செயற்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.