வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்குள் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கமானது அடுத்துவரும் 36 மணித்தியாலங்களில் குறைந்த அழுத்தமாக மாறக்கூடும் எனவும், அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்கு இது புயல் சின்னமாக மாற்றம் பெறக்கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில், மீனவர்கள் கடல் தொழிலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடல் பிராந்தியங்களில் தற்போது கடல் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள், உடனடியாக கரையோரத்திற்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேநேரம், புத்தளம் முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் தொழிலில் ஈடுபடும்போது மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.