டெல்லி செல்லும் கூட்டமைப்பு

TNA
TNA

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது.

இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக இந்திய பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாலைதீவுக்கு சென்றுவரும் வழியில் நான்கு மணித்தியால அவசர விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டிந்தார். இதன்போது ஜனாதிபதி, பிரதமர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இது குறுகிய விஜயமாக இருந்தமையால் கூட்டமைப்புடன் சினேகபூர்வமான சந்திப்பொன்றை மாத்திரமே இந்திய பிரதமரால் நடத்த முடிந்துள்ளதுடன், விரிவான பேச்சுக்களை நடத்த புதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்து சென்றிருந்தார்.

அதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், சித்தார்த்தன் உட்பட பலர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தியப் பிரதமரிடம், தேசிய பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும். தேசிய பிரச்சினைக்கு இலங்கை இன்னும் தீர்வை வழங்கவில்லை என்ற உண்மை குறித்து கூட்டமைப்பு ஆணித்தரமாக எடுத்துரைக்கவுள்ளதாக அறிய முடிகிறது.