வவுனியா செங்கற்படை பகுதியில் முதிரைக்குற்றிகளை கடத்திச்சென்ற கெப்ரக வாகனம் பல இலட்சம் பெறுமதியான 14 முதிரைக் குற்றிகளுடன் முற்றுகையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (24) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற மரக்கடத்தல் முறியடிப்பு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா செங்கற்படை பகுதியிலிருந்து கற்பகபுரம் நோக்கி மரக்குற்றிகளை கடத்தி செல்வதாக புளியங்குளம் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி ஈச்சங்குளம் இராணுவத்தினரும், புளியங்குளம் விஷேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிடாச்சூரி பகுதியில் மரக்குத்திகள் ஏற்றிச் சென்ற கெப்ரக வாகனம் துரத்தி பிடிக்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி தப்பியோடியுள்ளார்.
மீட்க்கப்பட்ட வாகனமும், மரக்குற்றிகளும் ஈச்சங்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.