விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்ததினமான நேற்றும் மாவீரர் தினமான இன்றும்வவுனியா மாவட்டம் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்புக்குள் உட்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி முதல் வவுனியாவின் சில பகுதிகளில் காவல்துறையினரின் கெடுபிடிகள் காணப்பட்ட போதும் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்ததினமான நேற்றும் இன்றும் பல பகுதிகளில் மேலதிக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக வவுனியாவில் 1379 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்ட இடம், பொங்கு தமிழ் நினைவுத் தூபி, தோணிக்கல் பகுதியில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அரவிந்தன் என்பவரின் வர்த்தக நிலையத்திற்கு முன் மற்றும் ஆலயங்கள், ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்டிய பகுதிகள் என பரவலாக காவல்துறையினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளதுடன், அப் பகுதிகளுக்கு வந்து செல்வோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் புலனாய்வாளர்களின் பிரசன்னமும் அதிகரித்து காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.