கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்துக்கான வீதியை அகலப்படுத்தி புனரமைக்கும் பணி இன்று ஆரம்பம்!

jeevan
jeevan

“ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்காது, பல்கலைக்கழகம் வராது, எதுவுமே நடக்காது எனக் குறைகளை மட்டுமே கூறிக்கொண்டு அரசியல் நடத்துபவர்களுக்கு மத்தியில், நிச்சயம் நடக்கும் எனக் கூறி அதற்கான தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கிப் பயணிப்பதே எமது உறுதியான கொள்கையாகும்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நீண்டகாலமாகக் குன்றும் குழியுமாகப் பேரவலங்களைத் தாங்கிக் காட்சியளித்த கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்துக்கான வீதியை அகலப்படுத்தி புனரமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இவ்வீதியைப் புனரமைப்பதற்கு 78 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மலையகத்திலுள்ள அரசியல்வாதியொருவர் வானொலியொன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். ஆயிரம் ரூபா கிடைக்குமா எனக் கேட்டனர், கிடைக்காது என்றார். பல்கலைக்கழகம் பற்றியும் வினா எழுப்பப்பட்டது, அதற்கும் வராது எனப் பதிலளித்துள்ளார். மலையக மக்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இடம்பெறவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

வராது, கிடைக்காது, முடியாது எனக் குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருப்பது தலைமைத்துவ பண்பு கிடையாது. தீர்வுகளை அடைவதற்காக தடையாக உள்ள காரணிகளை உடைத்தெறிய வேண்டும். அதனை எவ்வாறு செய்ய வேண்டும் எனத் திட்டம் வகுக்க வேண்டும். இதனை எம்மால் நிச்சயம் செய்ய முடியும். அரசியலுக்கு அப்பால் சிறந்த நிர்வாகியாகச் செயற்படுவதையே நான் விரும்புகின்றேன்.

மலையக மக்களும் இலங்கையர்களே. அபிவிருத்தித் திட்டங்களுக்காக வரவு – செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி அவர்களுக்கும் உரித்துடையாது. மத்திய அரசின் பட்ஜெட் என்பது முழு நாட்டுக்குமானது. அதில் ஒவ்வொரு பிரிவுகளுக்குகான ஒதுக்கீடுகள் இருக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் பதவிக்கு வந்து குறுகிய காலப்பகுதிதான் ஆகின்றது. அதற்குள் பல அபிவிருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீட்டுத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படும். அதற்கு முன்னர் அரைகுறையாக உள்ள வீடுகளை முழுமைப்படுத்தி பயனாளிகளிடம் கையளித்துவிட வேண்டும்.

அதேவேளை, ஆயிரம், ஆயிரம் என்று ஆயிரம் ரூபாவைப் பற்றி மட்டுமே கதைக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் ஆயிரம் ரூபா போதாது. தற்போதைய நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாக இருக்கின்றது. பேச்சுகளின்போதும் இதனை வலியுறுத்தியுள்ளோம். தொழிற்துறையை நவீனமயப்படுத்தி எவ்வித தொழில் நிபந்தனைகளும் இன்றி மாதச் சம்பளம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

சீனா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் ஆரம்பத்தில் வெள்ளையர்கள் தான் தேயிலைத் தோட்டங்களை நிர்வகித்தனர். தற்போது நிலைமை மாறியுள்ளது. மக்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே, எமது மக்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அதற்காகவே நாம் முயற்சிக்கின்றோம். எனவே, தொழிற்சங்க ரீதியிலாவது நாம் ஒன்றுபடவேண்டும்” – என்றார்.