வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பல நாட்களாக வீதியோரங்களில் (கதிரேசு வீதி , குருமன்காடு , மன்னார் வீதி ) காணப்படும் குப்பைகள் அகற்றப்படாமையினால் குப்பைகள் தேங்கி காணப்படுகின்றன.
நகர சபையினரினால் குப்பைகள் அகற்றும் பணிகள் தினசரி முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் வீதியோரங்களில் காணப்படும் குப்பைகள் நகரசபையினர் அகற்றுவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பைகளில் மற்றும் குப்பைக்கூடைகளில் வைக்கப்படும் குப்பைகளை மாத்திரம் நகரசபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் எடுத்துச் செல்லுகின்ற போதிலும் வீதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை நகரசபையினர் அகற்றுவதில்லை என்பதுடன் பல நாட்களாக வீதியோரங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதினால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மேலும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் அவர்களை இவ் விடயம் தொடர்பில் கேட்ட போது,
நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சிரமதான பணிகள் இடம்பெற்று வருகின்றமையினால் ஏனைய பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதில் சிறு தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளது. மிக விரைவில் தேங்கி கிடக்கும் குப்பைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.