ரவிகரன், சிவாஜி உட்பட 4 பேர் மீதான விசாரணை மே 17 இற்கு ஒத்திவைப்பு !

IMG 4700

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ம.க.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

IMG 4694

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக இடம்பெற்ற காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் 28.02.2018 அன்று முல்லைத்தீவு காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இதே வேளை, வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம் முன் பிணை கோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் அ.பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன நிரவாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகியோரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறாக நால்வர் மீதும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் நிலையில், இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இன்றைய வழக்கு விசாரணைகளில் நில அளவைத் திணைக்களத்தால் குற்றஞ்சாட்டப்பட்டோர் சார்பில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் ம.க .சிவாஜிலிங்கம், அ.பீற்றர் இளஞ்செழியன், அ.சண்முகலிங்கம் ஆகிய நால்வரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்தநிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து இந்த வழக்குடன் தொடர்புடைய அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறாமையால், குறித்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதிக்கு தவணையிடப்படுகின்றது என நீதிவான் உத்தரவிட்டார்.