கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட இலங்கைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை 2021 ஜனவரியில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்துவார்கள்.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 14-18 வரையும், இரண்டாவது போட்டி ஜனவரி 22-26 வரையும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடைபெறும்.
இதற்காக இங்கிலாந்து அணியானது 2021 ஜனவரி 02 ஆம் திகதி ஒரு பட்டாய விமானத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்து, ஹம்பாந்தோட்டையில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும்.
அதன் பின்னர் ஜனவரி 5 – 9 வரையான காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
கொரோனா தொற்றுநோயால் 2020 மார்ச் மாதத்தில் தொடர் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து மறுசீரமைக்கப்பட்ட சுற்றுப்பயணத்திற்கான உயிர் பாதுகாப்பு மற்றும் பயணத் திட்டங்களுக்கு இரு நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் ஒப்புக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.