நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இலங்கை ஆண்கள் அணி என்ற 3-1 என்ற செட்கள் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியுள்ளது. இதன்படி, 23-25, 25-20, 25-16 மற்றும் 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தக்கவைத்தது.
இதேவேளை மகளிர் கரப்பந்தாட்ட போட்டியின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மாலைத் தீவுகள் அணியை எதிர்கொண்டிருந்த இலங்கை மகளிர் அணி 25-13, 25-18, 25-8 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியது.
இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவின் கரப்பந்தாட்ட போட்டிகளின் இறுதி முடிவின் படி, இந்திய ஆண்கள் அணி, பாகிஸ்தான் அணியை 3-1 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றதுடன், இந்திய மகளிர் அணி 3-2 என்ற செட்கள் கணக்கில் நேபாளம் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.