பதவி விலகிய ஜெர்மனி கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜோச்சிம்!

1187715616.0
1187715616.0

ஜெர்மனி கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் 61 வயதான ஜோச்சிம் லோ 2006-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் ஜெர்மனி அணி 2014-ம் ஆண்டில் உலக கோப்பை போட்டியில் மகுடம் சூடியது. ஆனால் 2018-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ஜெர்மனி லீக் சுற்றுடன் வெளியேறி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் பயிற்சியாளர் பதவியை விட்டு விலகும்படி ஜோச்சிம் லோவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய அவர் பதவியை துறக்கவில்லை.

இந்த நிலையில் வரும் ஜூன் 11-ஆம் திகதி முதல் ஜூலை 11-ஆம் திகதி வரை பல்வேறு நகரங்களில் நடக்க உள்ள ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டியுடன் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக ஜோச்சிம் லோ அறிவித்துள்ளார். 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை அவரது ஒப்பந்த காலம் இருக்கும் நிலையில் ஓராண்டுக்கு முன்பே விலகுகிறார். அவரது முடிவை ஜெர்மனி கால்பந்து சங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது. ‘தேசத்தின் சிறந்த கால்பந்து வீரர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மிகச்சிறந்த அற்புதமான வெற்றிகளும் கிடைத்திருக்கின்றன. வேதனையான தோல்விகளையும் சந்தித்து இருக்கிறேன். ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரும் வகையில் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை வெற்றியோடு முடிக்க எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பேன்’ என்று ஜோச்சிம் லோ குறிப்பிட்டுள்ளார்.

ஜோச்சிம் லோவின் 15 ஆண்டுகால பயிற்சியின் கீழ் ஜெர்மனி அணி இதுவரை 189 சர்வதேச போட்டிகளில் விளையாடி 120-ல் வெற்றி, 38-ல் டிரா, 31-ல் தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.