இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் வலுவான நிலையில் பங்களாதேஷ்

320078
320078

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 541 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

கண்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதியன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

முதல் நாள் நிறைவில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன்,இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின்போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 474 ஓட்டங்களை பெற்றிருந்தது.

தொடர்ந்து மூன்றாம் நாளில் மேலும் 18 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 77 ஓட்டங்களை பெற்று மொத்தமாக 541 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் நஜ்முல் ஹொசைன் சாண்ட்டோ (163), அணித்தலைவர் மொமினுல் ஹக் (127) சதம் அடித்தனர்.

இவர்களைத் தவிர ஆரம்ப வீரராக களமிறங்கிய தமீம் இக்பால் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 90 ஓட்டங்களையும், முஷ்பிக்குர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால், லஹிரு குமார, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.