இலங்கையில் விளையாடப்பட்ட கடைசி 28 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தோல்வியின்றி (ட்ரோ) ஒரு போட்டிகூட முடிவடையவில்லை. அதாவது இலங்கை மண்ணில் நடத்தப்பட்ட கடைசி 28 போட்டிகளில் ஏதேனும் ஒரு அணி வெற்றியடைந்திருக்கும் அல்லது தோல்வியடைந்திருக்கும் ஆனால் எந்தவொரு போட்டியும் டிரோவில் முடிவடையவில்லை.
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதியன்று தென் ஆபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியே இலங்கையில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த கடைசிப் போட்டியாகும்.
இதற்குப் பின்னர் இவ்வாண்டு ஜனவரி 22 ஆம் திகதியன்று ஆரம்பமான டெஸ்ட் போட்டி வரையிலுமான 28 டெஸ்ட் போட்டிகளில் 14 போட்டிகளில் வெற்றியும் 14 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளன.
இந்நிலையில், தற்போது கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்றுவரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
ஆகவே, கடைசியாக நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளிலும் சமநிலை அடையாத நிலையில், இப்போட்டி சமநிலையில் நிறைவடையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தமது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 541 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்று மாலை 3.45 மணி வரை 3 விக்கெட்டுக்களை 457 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
ஆடுகளத்தில் அணித்தலைவர் திமுத் கருணாரட்ண 192 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 141 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.