கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் (பி.எஸ்.எல்.) தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பாகிஸ்தான் சுப்பர் லீக் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சியில் ஆரம்பமானது.
தொடரின் 14 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பாகிஸ்தானில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்த காரணத்தால், போட்டித் தொடர் பிற்போடப்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா அச்சுறுத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், எஞ்சிய லீக் போட்டிகள், அரை இறுதி போட்டிகள் மற்றும் இறுதி போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அணி வீரர்கள், பயிற்றுநர்கள், அதிகாரிகள் மற்றும் ஒளிப்பரப்பாளர்கள் என 200 க்கும் அதிகமானவர்களை பிரத்தியேக விமானம் மூலமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகருக்கு பயணித்துள்ளனர்.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இப்போட்டித் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.