பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது. களிமண் தரைப் போட்டியான இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், பிரெஞ்சு ஓபனில் 2 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியவருமான டொமினிக் தீம் (ஆஸ்திரியா), 68-ம் நிலை வீரரான பாப்லோ அந்துஜாரை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.
அனுபவம் வாய்ந்த டொமினிக் தீம் முதல் இரு செட்டுகளை கைப்பற்றிய நிலையில் எஞ்சிய 3 செட்டுகளை வரிசையாக பறிகொடுத்து அதிர்ந்து போனார்.
சுமார் 4 மணி 28 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 35 வயதான பாப்லோ அந்துஜார் 4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் தீமை வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட்ஸ்லாம் ஆட்டம் ஒன்றில் டொமினிக் முதல் 2 செட்டை வென்று அதன் பிறகு சறுக்குவது இது 2-வது முறையாகும். அத்துடன் 8-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்ற அவர் முதல் சுற்றுடன் வெளியேறுவது இதுவே முதல் தடவையாகும்.