டாக்கா பிரீமியர் லீக் (டி.பி.எல்) போட்டியில் நடுவர் மீது இரண்டு முறை கோபம் கொண்டு மோசமான முறையில் நடந்து கொண்டதற்காக எம்.எஸ்.சி கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு 4 ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி.பி.எல் போட்டியில் அபாஹனி லிமிடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசிய ஷகிப், எல்பிடபிள்யு கொடுக்க நடுவர் மறுத்ததற்குக் கோபம் கொண்டு ஸ்டம்புகளை காலால் எட்டி உதைத்து நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து, மழையால் ஆட்டத்தை நிறுத்த நடுவர்கள் எடுத்த முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்த ஷகிப், மூன்று ஸ்டம்புகளையும் பிடுங்கி வீசினார்.
இந்த விடியோ சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனது செயலுக்கு ஷகிப் மன்னிப்பும் கோரினார். இந்த நிலையில், 4 ஆட்டங்களில் விளையாட ஷகிப் அல் ஹசனுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வங்கதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் தளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.