சந்திமலின் அரைச்சதம் வீண் முதல் போட்டியில் வென்ற தென்னாபிரிக்கா முன்னிலை!

327162
327162

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் எய்டன் மார்க்ரம் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கலாக 48 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 23 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில்,164 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 28 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மஹராஜ் 19 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணியின் எய்டன் மார்க்ரம் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டி நாளைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.