பாகிஸ்தான் கிரிக்கட் அணியுடனான போட்டித் தொடரை இறுதி நேரத்தில் ரத்து செய்த நியூசிலாந்து அணி இன்று விசேட வானூர்தி சேவை ஒன்றின் மூலம் டுபாய் சென்றடைந்துள்ளது.
பாகிஸ்தானில் எந்தவகையான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்பதனை வெளியிட நியூசிலாந்து அணி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
எப்படியிருப்பினும், இந்த வியடம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கட் சபையுடன் சில தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துல்லியமான காரணம் குறித்து தனிப்பட்ட முறையிலோ அல்லது பொது மக்களுக்கோ வழங்கப்படாது என நியூசிலாந்து கிரிக்கட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரி டேவிட் வைற் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திட்டமிடப்பட்டுள்ள இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் என்பனவற்றின் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டுபாய்க்கு வருகை தந்துள்ள 34 உறுப்பினர்களை கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் தற்போது விருந்தகங்களில் 24 மணிநேரத்திற்கு சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.