இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதியானதையடுத்து, அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதேவேளை, அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 6 பேர் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் அந்த அணியின் வீரர் விஜய் சங்கர் மற்றும் அணி முகாமையாளர் விஜய் குமார் ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இன்றிரவு சன்ரைஸர் ஹைதராபாத் மற்றும் டெல்லி கெப்பிட்டல் அணிகளுக்கும் இடையிலான போட்டி இடம்பெறவுள்ள நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு ரெபிட் பீசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருடன் தொடர்பினை பேணிய எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை.
இந்நிலையில், இன்றைய போட்டி திட்டமிடப்படி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.