பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இலங்கை இளையோர் அணி!

Bangladesh Cricket
Bangladesh Cricket

19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இளையோர் சர்வதேச போட்டியில் இலங்கை 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் ‍ கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய துனித் வெல்லாலகே தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் 5 ஆவது விக்கெட்டுக்காக இணைந்துகொண்ட பவன் பதிராஜ, ரவீன் ஆகியோர் தமக்கிடையில் 80 ஓட்டங்களை பகிர்ந்தமை சிறப்பம்சமாகும். துடுப்பாட்டத்தில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி சார்பாக பவன் பதிராஜ 67 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இவரைத் தவிர, ரவீன் டி சில்வா 29 ஓட்டங்களையும் சதீஷ் ராஜபக்ச 28 ஓட்டங்களையும் பெற்று கொடுத்ததுடன், 9 ஆம் இலக்க வீரராக களமிறங்கிய யசிரு ரொட்றிகோ அதிரடியாக 15 பந்துகளில் 25 ஓட்டங்களை குவித்தமை இலங்கையின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது.

பந்துவீச்சில் ரிப்பொன் மொண்டல் 3 விக்கெட்டுகளையும், அசிக்கூர் ஸமன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 பங்களாதேஷ் அணி 46.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 42 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் பங்களா‍தேஷ் அணி சார்பாக அயிச் மொல்லாஹ் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார். இவருடன் 5 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அரிபுல் இஸ்லாம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார். அரிபுல் 38 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்கவே , அவ்வணியின் விக்கெட்டுக்கள் சரிந்தன.

மறுமுனையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி போட்டியின் இறுதிவரை போராடிய அயிச் மொல்லாஹ் 86 ஓட்டங்களைப் பெற்றவேளையில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

இவர் 93 பந்துகளில் 9 பவுண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்களைப் அதிகப்பட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி சார்பாக ட்ரெவின் மெத்தியூஸ் 4 விக்கெட்டுகளையும், ஜஷெவோன் டேனியல் 2 விக்கெட்டுக்களையும், சமிந்து விக்ரமசிங்க, துனித் வெல்லாலகே, மதீஷ் பத்திரண ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதியன்று நடைபெறும்.