பாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு பலத்த பாதுகாப்பு

west indies 1
west indies 1

மூன்று இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும்.

மூன்று மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி நியூசிலாந்து அணி தனது பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை இறுதி நேரத்தில் ரத்துச் செய்து போட்டியில் பங்கேற்காமல் நாடு திரும்பியது.

இதனால் பாகிஸ்தான் சென்றடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியினர், கராச்சி விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விடுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர் சிறப்பு பாதுகாப்புக்கு மத்தியில் கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் எதிர்வரும் 13, 14, 16 ஆம் திகதிகளில் இருபதுக்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் 18, 20, 22 ஆகிய திகதிகளிலும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் இடம்பெறவுள்ளன.

தலைவர் கைரன் பொல்லார்ட், பொபியன் அலென், ஒபெட் மெக்காய் ஆகியோர் காயம் காரணமாகவும், இவின் லீவிஸ், ஹெட்மயர், அண்ட்ரே ரஸல், சிமோன்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணத்தினாலும் இந்த போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் தலைவர் ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சிரேஷ்ட வீரர்கள் இல்லாத மேற்கிந்திய தீவுகள் அணி இந்த தொடரில் பங்கேற்கிறது.

இருபதுக்கு 20 அணியின் தலைவராக நிகோலஸ் பூரனும், ஒருநாள் சர்வதேச அணியின் தலைவராக ஷாய் ஹோப்பும் பெயரிடப்பட்டுள்ளனர்.