இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இந்திய அணி கடைசியாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் ஆஸ்திரேலியாவை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.
உலக கோப்பை போட்டிக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 ஆட்டத்தில் வென்ற கோலி அணி அடுத்த 3 போட்டியில் தோற்று தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்தது.
அதற்கு தற்போதைய தொடரில் இந்திய அணி பழி தீர்க்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி எப்போதுமே சிறப்பாக ஆடுவார். கடந்த தொடரில் 2 சதத்துடன் 310 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரிலும் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.
இங்கிலாந்தில் ஜூலை மாதம் முடிந்த உலக கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும்.
5 டெஸ்டில் 4 சதம் விளாசிய லபுஷ்சேன் முதல்முறையாக ஒருநாள் அணியில் இடம் பெற்று உள்ளார்.
சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலம். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.