ப்ரோட்டுக்கு அபராதம்!

i
i

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீத அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்த, தென்னாபிரிக்கா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 466 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடியது.

டு பிளஸிஸ் களத்தில் துடுப்பெடுத்தாடி கொண்டிருக்கும் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட், டு பிளஸிஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது உச்சக்கட்டத்தை தொட, ஸ்டுவர்ட் ப்ரோட், டு பிளெஸிஸ்சை தகாத வார்த்தைகளினால் வசைப்பாடினார். இதனையடுத்து நடுவர்கள் விரைந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்கள்.

இச்சம்பவம் மைதானத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், போட்டி நிறைவடைந்ததன் பின்னர் களநடுவர்களாக செயற்பட்ட ரொட் டக்கர், ஜொய்ல் வில்சன், மூன்றாம் நடுவர் ப்ரூஸ் ஒக்ஸன்பேர்ட் மற்றும் நான்காம் நடுவர் அலஹ்டீன் பலேகர் ஆகியோரினால் போட்டி மத்தியஸ்தரிடம் குறித்த நிகழ்வு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் சபையினுடைய விதிமுறையில் வீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நடத்தை கோட்பாடுகளை உள்ளடக்கும் இலக்கம் 2.3 இன் படி சர்வதேச போட்டியொன்றின் போது உபயோகிக்கக்கூடாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியதன் அடிப்படையில் ஸ்டுவர்ட் ப்ரோட் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இப்போட்டி மத்தியஸ்தரான அண்டி பைக்ரொப்ட் மூலமாக போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீத தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் குறித்த சம்பவத்திற்காக தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 24 மாத காலப்பகுதியில் ஸ்டுவர்ட் ப்ரோட் இரண்டாவது தகுதி இழப்பீட்டு புள்ளியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இந்த தொடரில், முன்னதாக ஒழுக்க விதிமுறை மீறலுக்காக இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கும், தென்னாபிரிக்கா அணியினன் வேகப்பந்து வீச்சாளரான கார்கிஸோ ரபாபடா, சகலதுறை வீரர் வெர்னோன் பிளெண்டர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.