இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றியிலக்காக 361 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற, இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 27 ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸிக்காக 406 ஓட்டங்களை குவித்தது.
இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸிக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் சிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவின் பந்துப் பரிமாற்றத்துக்கு முகங்கொடுக்க முடியாது 119.5 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 293 ஓட்டங்களை பெற்று, 113 ஓட்டங்களினால் பின்னடைவை சந்தித்தனர்.
இந்த இன்னிங்ஸில் சிக்கந்தர் ராசா 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸிக்காக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணியினர் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தனது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.
சிம்பாப்வே அணி சார்பில் பிரண்டன் டெய்லர் 67 ஓட்டங்களையும், சிக்கந்தர் ராசா 34 ஓட்டங்களையும், அணித் தலைவர் சேன் வில்லியம்ஸ் 53 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புலுதெனிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 361 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஓட்ட இலங்கை நோக்கி இலங்கை அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.