நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டியில் சில புதிய விடயங்களை கற்றுக் கொண்டதாக, இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் நான்காவது பரபரப்பான ரி-20 போட்டிகளில், இந்தியக் கிரிக்கெட் அணி சுப்பர ஓவரில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் பின்னர் விராட் கோஹ்லி, இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் கூறிய கருத்துக்கள் இவை,
”கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து நான் சில புதிய விடயங்கள் கற்றுள்ளேன். அது எதிரணி சிறப்பாக விளையாடும்போது, இறுதி கட்டம் வரை பொறுமையாக இருந்து, போட்டியை தங்கள் பக்கம் திரும்ப முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான்.
இதைவிட அற்புதமான போட்டிகளை நம்மால் கேட்க முடியாது. இதற்கு முன் நாங்கள் சுப்பர் ஓவரில் விளையாடியது கிடையாது. தற்போது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். இது அணியின் தன்மையை காட்டுகிறது.
ஆரம்பத்தில் கே.எல் ராகுல் உடன் சஞ்சு சாம்சனை சுப்பர் ஓவரில் களம் இறக்க நினைத்தோம். ஆனால் கே.எல் ராகுல் என்னிடம், நீங்கள்தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். உங்களுக்கு அனுபவம் அதிகம் என்றார். அதனால்தான் நான் ஆரம்ப வீரராக களம் இறங்கினேன்.
கே.எல். ராகுலின் முதல் இரண்டு ஷொட்டுகளும் முக்கியமானதாக அமைந்தது. அதன்பின் நீங்கள் இடைவெளி பார்த்து பந்தை தட்டிவிட்டால் அணியை வெற்றி பெற வைத்து விடலாம்.
முதற் தர வரிசையில் சஞ்சு சாம்சன் பயமில்லாமல் விளையாடக் கூடியவர். நாங்கள் ஆடுகளத்தை சரியாக கணிக்கவில்லை. அவர் ஆட்டத்தின் வேகத்தை அப்படியே எடுத்துச் செல்ல முயன்றார். அவரது திறமை மீது அவர் உறுதியாக இருக்க வேண்டும். ” என கூறியுள்ளார்.