கே. எல். ராகுலின் அசத்தலான சதத்தின் உதவியுடன் பெங்களூர் அணியை 97 ஓட்டங்களால் வெற்றி கொண்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
13 ஆவது ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியும் மோதின.
நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூரின் அணித்தலைவர் விராட் கோலி, முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.
துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணிக்கு அணித்தலைவர் ராகுல், அகர்வால் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அகர்வால் 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ‘போல்ட்’ ஆனார்.
அவருக்கு பின்னர் வந்த பூரன் நிதானமாக ஆட, மறுமுனையில் நின்ற கே. எல். ராகுல் அரைச்சதம் கடந்தார்.
பூரன் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மக்ஸ்வெல் களமிறங்கினார். ஆனால், அவரால் நிலைக்க முடியவில்லை. 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சாளர்களை அணித்தலைவர் கோலி மாற்றினாலும், களத்தடுப்பில் பெங்களூர் அணி மிக மோசமாக சொதப்பியது. ராகுலின் இலகுவான இரு பிடியெடுப்பு சந்தர்ப்பங்களைஅணித்தலைவர்கோலியே தவறவிட்டார்.
இது அவருக்கு வாய்ப்பாகவே களத்தில் அதிரடி காட்டி 62 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார் ராகுல்.
20 ஓவர்களில் பஞ்சாப் அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கே.எல். ராகுல் 69 பந்துகளில் 7 சிக்ஸர், 14 பௌண்டரிகள் அடங்கலாக 132 ஓட்டங்களையும், நாயர் 15 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
207 என்ற இமாலய இலக்கைத் துரத்த ஆரம்பித்தது. சன்ரைசர்ஸூடனான போட்டியில் அரைச்சதம் கடந்து அசத்திய படிக்கல் இம்முறை ஒரு ஓட்டத்துடன் கொட்ரெல்லின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவருக்கு அடுத்து வந்த பிலிப்பி டக் அவுட் ஆனால், அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவர் கோலி (1) இந்த ஆட்டத்திலும் ரசிகர்களை ஏமாற்றினார்.
மற்றொரு தொடக்க வீரரான அரோன் பின்ஞ்ச் நிதானமாக ஆடி 20 ஓட்டங்களுடன் ரவி விஸ்னோயின் பந்தல் ‘ஆட்டம்இழந்தார்
ஏபி டி வில்லியர்ஸ் 28, வாஷிங்டன் சுந்தர் 30 என்று ஆட்டத்தில் சொதப்ப, பெங்களூரின் விக்கெட்கள் மளமளவென்று சரிந்தன.
17 ஓவர்கள் நிறைவில் 109 ஓட்டங்களைப் பெற்றது பெங்களூர். இதனால், 97 ஓட்டங்களால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் ரவி விஸ்னோய், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், கொட்ரேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அதிரடியாக ஆடி சதம் அடித்த கே. எல். ராகுல் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.