நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர்லீக் தொடரின் 32ஆவது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பெட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும், ஓய்ன் மோர்கன் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், ராகுல் சஹார் 2 விக்கெட்டுகளையும், போல்ட், குல்டர் நெய்ல் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 16.5 ஓவர்கள் நிறைவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, குயிண்டன் டி கொக் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்த குயிண்டன் டி கொக் தெரிவுசெய்யப்பட்டார்.