கோலியின் அணியை வீழ்த்தியது நடப்பு செம்பியன் அணி!

Mumbai indians 1
Mumbai indians 1

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 48ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தேவ்தத் படிக்கல் 74 ஓட்டங்களையும் பிலிப்பே 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், பும்ரா 3 விக்கெட்டுகளையும் ட்ரென்ட் போல்ட், ராகுல் சஹார் மற்றும் கிய்ரன் பொலார்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்ட்யா 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் மோரிஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 43 பந்துகளில் 10 பவுண்ரிகள் 3 சிக்ஸர்கள் அடங்களாக ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சூர்யகுமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.