உலக சக்திகளுடனான மோதலைத் தவிர்க்க விரும்புவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு எழுதிய கடிதத்தில் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானிய புரட்சிப் படையின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டு ஓராண்டு நினைவையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் ஈரானின் வளைகுடா பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் அண்மைய செயற்பாடுகளை ஈரான் கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ஈரானின் வளைகுடா மற்றும் ஓமான் கடலில் அமெரிக்காவின் இராணுவ சாகசத்தை ஈரான் கண்டித்துள்ளது.
அத்துடன், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவால் போலித் தகவல்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அச்சுறுத்தும் கருத்துக்கள் பகிரப்படுவதையும் ஈரான் கண்டித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் போர்க் குணங்கள் பதற்றங்களை ஆபத்தான நிலைக்கு உயர்த்தும் எனவும் அதன் அனைத்து விளைவுகளையும் அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஈரான் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் மோதலை விரும்பவில்லை என்பதுடன் தமது மக்களையும் தேசிய பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கும் உறுதி பூண்டுள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.