சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா இன்று புதன்கிழமை விடுதலையானார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூருவிலுள்ள அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை மையத்திற்கு வைத்தியர்கள் மாற்றியுள்ளதோடு, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்படி சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா இன்று விடுதலையானதாக சிறை அதிகாரிகள் வைத்தியசாலையில் சந்தித்து சிறையில் இருந்து விடுதலை ஆனதற்கான உத்தரவை வழங்கியுள்ளனர்.
சிறைவாசம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.