ரஷ்யாவில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே சந்திப்பு நடைபெற்றது. கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்கச் சென்றுள்ளார்.
இதில் புதன்கிழமை இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் வழித்தொடர்பு, எரிசக்தி, இயற்கை எரிவாயு, பெட்ரோல், தகவல் தொடர்பு, கலாச்சாரம் உள்ளிட்ட 15 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. வர்த்தகம், முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரங்கம், அணு சக்தி,
பாதுகாப்பு, விமானம், கடல்சார் தொடர்பு, போக்குவரத்துக் கட்டமைப்பு போன்றவற்றில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனையை இரு நாடுகளின் தலைவர்களும் நடத்தினர்.
இந்நிலையில், பிரதமர் மோடி வியாழக்கிழமை ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை இன்று ரஷ்யாவின் விளாடிவோஸ்டக்வில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் ரவிஷ்குமார் கூறும்போது, “பொருளாதாரம், பாதுகாப்புத் துறைகள், 5 ஜி என பன்முக உறவுகள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். பிராந்திய நிலைமை குறித்த கருத்துகளை இருவரும் பரிமாறிக் கொண்டனர்” என்றார்.
பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளின் உறவைப் பலப்படுத்துவது தொடர்பாகவும் மோடியும் ஷின்சே அபேவும் கலந்தாலோசித்தனர். ஜப்பான் பிரதமர் அபேவுடனான சந்திப்பிற்குப் பிறகு மோடி, மலேசிய பிரதமர் மகதிர் பின் முகமதுவைச் சந்திக்கிறார் என்று
பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.