மெக்சிகோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜலிஸ்கோ மாகாணம் நாட்டிலேயே அதிக அளவு வன்முறை சம்பவங்கள் நிகழும் மாகாணமாக இருந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவுக்கு இங்கு ரகசிய புதைகுழிகளில் இருந்து ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தொழில் போட்டி காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்வதால் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன.
இந்தநிலையில் ஜலிஸ்கோவின் வடக்கு பகுதியில் உள்ள குவாடலஜாரா நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு 10 ஆண்கள் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்து இறங்கிய மர்ம நபர்கள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர்கள் 10 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் அந்த வீட்டினுள் இருந்த ஒரு பெண் மற்றும் 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனிடையே இந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கொலையாளிகள் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். காவல்துறையினர் படுகாயம் அடைந்த பெண் மற்றும் 2 சிறுவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபர்கள் யார் தாக்குதலின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.