வொஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் தாக்குதல் நடத்துவதற்கும், நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் பயங்கரவாதிகள் சதி செய்திருப்பதாக அமெரிக்க காவல்துறையினருக்கு நேற்றுமுன்தினம் உளவு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை எப்.பி.ஐ.யும், உள்நாட்டு பாதுகாப்பு துறையும் ஒரு அறிக்கை வெளியிட்டன.
அந்த அறிக்கையில், “பெப்ரவரி பிற்பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாத குழுவினர், அமெரிக்க நாடாளுமன்றத்தை கைப்பற்றுவது குறித்தும், அதற்கான திட்டங்கள் குறித்தும் விவாதித்து உள்ளனர். அத்துடன் மார்ச் 4ஆம் திகதிக்குள் ஜனநாயக கட்சி எம்.பி.க்களை அகற்றுவதற்கான திட்டம் குறித்தும் விவாதித்து இருக்கிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கானோரை வொஷிங்டன் செல்ல வற்புறுத்தவும் விவாதித்து உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உளவுத்தகவலை வொஷிங்டன் கெபிட்டல் காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், “மார்ச் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம், பொதுமக்கள் மற்றும் எங்கள் காவல்துறை அதிகாரிகளை காப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளோம்.
இந்த தகவலின் தன்மை காரணமாக இது குறித்த கூடுதல் விவரங்களை எங்களால் வழங்க முடியாது” என குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என தகவல் வெளியானதை தொடர்ந்து பிரதிநிதிகள் சபை கூட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது. அதே நேரம் திட்டமிட்டபடி செனட் சபை கூட்டம் நடத்தப்பட்டது.
பயங்கரவாதிகள் தாக்குதல் சதி திட்டம் தெரியவந்ததை அடுத்து வொஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெபிட்டல் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.