கடலில் மீன் வளம் பெருக மீனவ மக்கள் 40 மணி நேர தொடர் கூட்டுப்பிரார்த்தனை!

IMG 20210307 WA0064
IMG 20210307 WA0064

பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் வளம் பெருக வேண்டியும், நடுக்கடலில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டியும் தங்கச்சிமடத்தில் உள்ள சூசையப்பர்பட்டிணம் தேவாலயத்தில் மீனவர்கள் குடும்பங்களுடன் 40 மணிநேரம் தொடர் கூட்டு பிரார்த்தனை நடத்தி நிறைவாக தங்கச்சிமடம் கடலில் மலர் தூவி கடல் மாதாவுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

தமிழகத்தில் நீண்ட கடற்கரை பகுதியை கொண்ட மாவட்டம் ராமநாதபுர மாவட்டம். இங்கு உள்ள பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளில் அதிகமானோர் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். சமீப காலமாக கடலில் மீன்வளம் குறைந்து வருவதால் மீனவர்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் தாக்கபடுவதும், நடுக்கடலில் விரட்டியடிப்பதும் கைது செய்வதும் தொடர் கதையாகிவருவதால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு மாற்று தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தங்கச்சிமடம் சூசைப்படடிணத்தில் உள்ள குழந்தை இயேசு தேவாலயத்தில் 6 பங்கு தந்தைகள் அடங்கிய மீனவர்கள் மீனவ குடும்பங்களும் 40 மணிநேரம் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். நிறைவாக தேவாலயத்திலிருந்து மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஊர்வலமாக வந்து தங்கச்சிமடம் வடக்குக் கடற்கரையில் மலர்தூவி கடல் மாதாவிற்கு சிறப்பு பூஜை செய்தனர்.

இந்த கூட்டு பிராத்தனையால் கடலில் மீன் வளம் பெருகி மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும், நடுக்கடலில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீன் பிடிக்கவும் இறைவன் வழி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த 40 மணி நேர தொடர் கூட்டு பிராத்தனையில் பாம்பன்,தங்கச்சிமடம், அக்காள்மடம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.