பஞ்சாப் மாநிலத்தில் நேற்று மாலை தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
குர்தாஸ்பூர் மாவட்டம் பட்டாலாவில் (Batala) குடியிருப்புகள் அமைந்த பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இந்த ஆலை இயங்கி வந்தது. தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில், 3 மாடி கட்டிடம் தரைமட்டமானதுடன், அருகில் இருந்த சில வீடுகளும் வெடிவிபத்தில் சேதமடைந்தன.
கட்டிட இடிபாடுகளில் இருந்து, கருகிய நிலையில் 23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 27 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாலும், கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுவதாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.