மும்பையில் கனமழை காரணமாக 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 118 விமானங்கள் தாமதமாக சென்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை முதல் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மும்பை மாநகரம் தண்ணீரில் மிதந்து வருகிறது.
மும்பையில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் வடிந்து விட்ட நிலையிலும் வானிலை ஆய்வு மையத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதை கருத்தில் கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய பேரிடர் நிவாரணப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. குர்லா, பரேல் மற்றும் அந்தேரியில் தேசிய பேரிடர் நிவாரணப்படை தயார் நிலையில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
தொடர் மழை காரணமாக சுமார் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் 118 விமானங்கள் இன்று தாமதமாக சென்றன, மும்பை வரும் 14 விமானங்கள் மற்றும் 16 வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் இடைவிடாத மழை காரணமாக, ரயில் மற்றும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
பயணிகள் ஏர் இந்தியா வலைத்தளம், மொபைல் ஆப் அல்லது வாடிக்கையாளர் சேவை மூலம் விமான நேரத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என ஏர் இந்தியா அறிவித்து உள்ளது.