ரயில்வே துறை தேர்வுகளில் தமிழ் உட்பட மாநில மொழிகள் புறக்கணிப்பு

stalin
stalin

தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் வலுக்கட்டாயமாக ஈடுபட்டு மீண்டும் மொழிப்போராட்டத்துக்கான களம் அமைத்துத் தர வேண்டாம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடாத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடாத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் நடத்தினால் போதும் என்றும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல, ரயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு தி.மு.க இன் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தபால் துறையில் ஏற்கனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது மத்திய அரசு, தபால் துறைத் தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆகவே தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது, ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் பா.ஜ.க ஆட்சியில் ரயில்வே வாரியம் போன்ற அமைப்புகள் உரிய முறையில் மதிக்கத் தவறுவது இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது. ரயில்வே துறையில் இந்தி மொழி கற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி தெரிந்தவர்களை படிப்படியாகக் குறைக்கும் சதித்திட்டமாகவே இதை தி.மு.க கருதுகிறது.

இந்தியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழ்மொழிக்குத் துரோகம் செய்யும் ரயில்வே வாரியத்தின் இந்த பாரபட்சமான நடவடிக்கையை தி.மு.க ஆல் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே தபால்துறைத் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தும் அதேவேளையில், ரயில்வேயில் நடைபெறும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகள் அனைத்துமே தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடாத்தப்பட வேண்டும் என்றும், வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.