மெக்ஸிகோ சிட்டி மெட்ரோ ரயில் பாலம் திங்களன்று இடிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இதுவரை குழைந்தைகள் உட்பட குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 79 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் நகர அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரயில் வண்டிக்குள் சிக்கியுள்ள நான்கு சடலங்களை மீட்புப் படையினர் மீட்டனர். அந்த நால்வரும் இறந்தவர்கள் 23 பேரில் சேர்க்கப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
செவ்வாயன்று பாலத்தில் தொங்கியுள்ள ரயில் வண்டியை மீட்பதற்கு ஒரு கிரேன் கொண்டு வரப்பட்டது.
உலகின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான மெக்ஸிகோவின் தலைநகர மெட்ரோ ரயில் சேவை அமைப்பில் பல தசாப்த காலப் பகுதியில் பதிவான மிக மோசமான சம்பவம் இதுவாகும்.
இந்த சம்பவம் செவ்வாயன்று அந் நாட்டு நேரப்படி இரவு 10 மணியளவில் மெக்ஸிகோ நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் மெக்ஸிகோ மக்களிடையே கோபத்தை அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் விசாரணைகள் மறைக்கப்படாமல் வெளிப்படைத் தன்மையாக இடம்பெறும் என்று கூறியுள்ளார்.