பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோன் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள ட்ரோம் பிராந்தியத்துக்கு இன்று(8) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு அருகில் சென்று அங்கிருந்த ஒருவரிடம் கைலாகு கொடுத்தபோது, ஜனாதிபதி மெக்ரோனை அந்நபர் திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக மெக்ரோனின் மெய்ப்பாதுகாவல்கள் அந்நபரை மடக்கிப்பிடித்ததுடன், ஜனாதிபதியை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துசென்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலை மேற்கொண்ட நபரின் நோக்கம் தெளிவாக தெரியவரவில்லை என்றும், அவர் கன்னத்தில் அறையும்போது, கோபமான வார்த்தை பிரயோகம் வெளிப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு இழுக்கானது என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.