தாக்கப்பட்ட போதும் பொதுமக்களை அருகில் சென்று சந்திப்பதை தாம் தவிர்க்கப்போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் தென்கிழக்கு பகுதிக்கு, அதிகாரபூர்வ விஜயம் மேற்கொண்டபோது, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் கன்னத்தில், நபர் ஒருவர் தாக்கும் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
பாடசாலை ஒன்றின் நிகழ்வில் பங்கேற்க சென்றபோது, பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களை சந்திப்பதற்காக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அருகில் சென்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த நபர் ஒருவர் ஜனாதிபதி மெக்ரோனின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதையடுத்து, குறித்த இடத்தில், பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பாதுகாப்பு தரப்பினர், ஜனாதிபதி மெக்ரோனை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அடங்கிய காணொளி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது தனிப்பட்ட சம்பவம் என்றும், தாக்கிய நபர், விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவர் அல்ல என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.