வடமேற்கு நைஜீரியாவில் கடத்தல் குழுவினரால் கடத்தப்பட்டிருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட சுமார் 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் பாலூட்டும் தாய்மார்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஸம்ஃபாரா மாநிலத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி அவர்கள் கடத்தப்பட்டபோது, நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், எவ்வித கப்பம் கோரலுமின்றி அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஸம்ஃபாரா மாநில அரசாங்கம், மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
விடுவிக்கப்பட்டவர்கள், தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
2020 ஆம் ஆண்டு முதல் அங்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் கடத்தப்பட்ட நிலையில், அவர்களில் அதிகமானோர் கப்பம் செலுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.