ரஷ்ய பல்கலைக்கழகத்தில் 18 வயது மாணவனால் 8 பேர் சுட்டுக் கொலை!

gun 1
gun 1

ரஷ்யாவின் பேர்ம் நகரிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், மாணவரொருவர் மேற்கொண்ட பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கைதின்போது அவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரியிடமிருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்பிச்செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்றும் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரி 18 வயதுடையவர் என்றும் அவர் முன்னதாக துப்பாக்கி, தலைக்கவசம் மற்றும் தோட்டாக்களுடன் சமூகவலைத்தளத்தில் படங்களை பதிவிட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் இந்த ஆண்டு கல்வி நிலையங்களில் நடந்த இரண்டாவது துப்பாக்கி சூடு இதுவாகும்.

இதற்கு முன்னர் ரஷ்யாவின் கஸான் நகரிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த மே மாதத்தில் 19 வயதான இளைஞரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தையடுத்து, ரஷ்யாவின் துப்பாக்கி பயன்பாடு தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.