ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் கூலிப்படையினரால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, கடத்தல் கும்பல்களின் கைவரிசை மீண்டும் ஓங்கியுள்ளது.
கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிகளவு கடத்தல் சம்பவங்கள் நடக்கும் நாடாக இருந்து வருகிறது. எனினும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் பலனாக கடந்த சில ஆண்டுகளாக அங்கு கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தன.
இந்நிலையில், ஹைதியின் தலைநகர் போர்ட் அவ்பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றிவரும் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவாலய ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு அருகில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கு சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தவேளை, இனந்தெரியாத கும்பலொன்று அதிலிருந்த சிறுவர்கள் உட்பட 17 பேரை கடத்திச் சென்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஹைதி அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்து வருகிறோம் என போர்ட் அவ் பிரின்சில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
எனினும் கடத்தல்காரர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? கடத்தப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன? போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.