400 பேரினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயது சிறுமி!

rape
rape

இந்தியாவில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின், பீட் மாவட்டத்தில் 16 வயது சிறுமியொருவர், கடந்த 6 மாதங்களில் 400 பேரினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சிறுமி திருமணம் முடிந்து 6 மாதங்களில் காவல்துறையினர் உட்பட 400 க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமிக்குக் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகக் குறித்த சிறுமி அங்கிருந்து வெளியேறிப் பேருந்து நிலையமொன்றில் யாசகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன்போது அவர் பல நபர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கச் சென்றபோது அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவராலும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது குறித்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ளாரெனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுவர் திருமணத் தடைச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் துஷ்பிரயோகக் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.